ஆமாங்க, சத்தியமாக சொல்கிறேன் கொரோனா ஒழுக்கமானது தான். ஏன்னா …..
1) கொரோனா தன் கையில் கால்குலேட்டருடன்தான் சுற்றித் கொண்டிருக்கும், திருமண விஷேசங்களுக்கு வரும் 51-வது நபரைத்தான் தாக்கும்.
2) இறப்பு போன்ற காரியங்களுக்கு வரும் 26-வது நபரை மட்டும் காதலிக்கும்.
3) பேருந்துகளில் நின்று கொண்டு பயணிப்பவர்களை மட்டும் ஓடிப்போய் பிடித்துக் கொள்ளும். ஆனால் உட்கார்ந்து இருப்பவர்களை ஒருபோதும் கண்டு கொள்ளாது.
4) காரில் பயணம் செய்யும் 5வது நபரையும், ஆட்டோவில் பயணிக்கும் 4வது நபரை மட்டுமே குறி வைக்கும்.
5) காந்தி அடிகளாருக்குப் பிறகு மதுவை வெறுக்கும் ஒரு உத்தம பிறவிதான் நமது கொரோனா, ஆமாங்க கொரோனாவை சுட்டுப் போட்டாலும் TASMAC கடைகள் பக்கம் தன் பார்வையை கூட திருப்பாது, கண்டுக்காமல் போய்விடும்.
6) முக கவசம் அணிந்தவர்களிடம் முகம் காட்டாது சென்றுவிடும்.
7) நீல அகலம் அளக்கும் ‘டேப்’புடனேயே சுற்றும் கொரோனா சமூக இடைவெளி சரியாக 6 அடி விட்டு நிற்கும் நபர்களை தொடாமல் தாண்டி போய் 6 அடிக்கும் குறைவான இடைவெளியில் நெருக்கமாக நிற்கும் நபர்களை மட்டும் பழி வாங்கும்.
8) கொரோனா தன்னை அழகுப்படுத்திக் கொள்வதில் அலாதி பிரியம் கொண்டுள்ளது. ஆகவேதான் 24 மணி நேரமும் சலூன் மற்றும் அழகு நிலையங்களில் அமைதியாக அமர்ந்திருக்கும்.
9) கடவுள் மீது கொரோனாவுக்கு அளவு கடந்த பக்தி ஆகவே அனைத்து வழிப்பாட்டுத் தளங்களிலும் கொரோனா வாழ்ந்து வருவதோடு, வழிபாட்டுத் தளங்களின் ஊழியர்கள் தவிர யார் வந்தாலும் உடனே கொரோனா அவர்களை கபளீகரம் செய்து விடும்.
10) நேரத்தைக் கடைப் பிடிக்கும் வல்லமை கொண்டது கொரோனா, ஆமாங்க தினம்தோறும் இரவு 10.00 மணி வரை யாரையுமே கண்டு கொள்ளாத கொரோனா மிகச்சரியாக இரவு 10.01 க்கு வெளியில் திரியும் நபர்களை மிக லாபகமாக பிடித்துக் கொள்ளும்.
11) தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டவர்களை எவ்வளவு லஞ்சம் கொடுத்தாலும் திரும்பி கூட பார்க்காது.
12) அனுதினமும் AC-யிலேயே வாழும் கொரோனா, AC பயன்படுத்தாத கடைகள் பக்கத்தில் செல்வதற்கே மிகவும் அஞ்சும்.
13) கிருமிநாசினி மீது கொரோனவிற்கு மரியாதை கலந்த பயம், ஆம், கிருமி நாசினி பயன்படுத்தியவர்கள் அருகில் செல்லவே செல்லாது.
அதனால தாங்க சொல்றேன் கொரோனா மிகவும் ஒழுக்கமானது என்று.
இப்படிக்கு,
என்றும் அன்புடன்,
M.J. நசீர் கான்,
வழக்கறிஞர், மதுரை.