தமிழக குடும்ப தலைவர்களின் தலையில் 2 லட்சத்து 63,976 ரூபாய் கடன்! நிதியமைச்சர் வெளியிட்ட 120 பக்க வெள்ளை அறிக்கை!
அரசின் நிதி நிலைமை குறித்த 120 பக்க வெள்ளை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.
கடந்த மே மாதம், நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் `அரசின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்’ என தி.மு.க தனது அறிக்கையில் தெரிவித்தது.
இந்நிலையில் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை தயாரிக்கும் பணியில் நிதித்துறை அதிகாரிகள் கடந்த ஒரு மாதமாக ஈடுபட்டிருந்தனர்.
ஒருவழியாக இந்த தயாரிப்பு பணி முடிவடைந்த நிலையில், இன்று காலை நாமக்கல் கவிஞர் மாளிகையில் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை அமைச்சர் வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், மேற்படி 120 பக்கங்களில் குறிப்பிடாத பல அம்சங்களை சரமரியாக கொட்டித்தீர்த்தார்.
இந்த அறிக்கை முதலமைச்சர் மற்றும் அவரது செயலர்களும் பல திருத்தங்களைக் கூறியதன் படி வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பணிக்காக நிதித்துறை செயலர் கிருஷ்ணன், இணைச் செயலர், சிறப்புச் செயலர்கள் ஆகியோர் மூன்று மாதங்கள் முயற்சி எடுத்து உழைத்து இந்தத் தகவல்களைத் திரட்டியுள்ளனர்”
“ இந்த அறிக்கையை நாங்கள் வெளியிடுவதற்கு முன் பல மாநிலங்களின் வெள்ளை அறிக்கைகளை ஆய்வு செய்தோம். ஆந்திரா, பஞ்சாப் மட்டுமல்லாமல் 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதித்துறை அமைச்சராக இருந்த பொன்னையன் வெளியிட்ட அறிக்கையையும் ஆய்வு செய்தோம்.
அதையெல்லாம் பார்த்தால் இந்த அறிக்கையானது, இரண்டு வகைகளில் மாறுதல் உடையதாக உள்ளது.
ஒன்று அனைத்து தகவல்களையும் சேர்த்து கூடுதல் விவரம் உள்ள அறிக்கை.
இரண்டாவது, ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் உள்ள நிலவரத்தை உள்ளடக்கியதாக உள்ளது.
தமிழ்நாட்டில் உயந்துள்ள கடன் அளவு?
தமிழகத்தின் 2020-21 நிதி ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக உள்ளது. 2021 – 22ம் ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கணக்கீட்டின்படி மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் ரூ.5,70,189 கோடியாக உள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,63,976 கடன் உள்ளது என்று வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1999-2000 – ரூ.18,989 கோடி2000-2001 – ரூ.28,685 கோடி2001-2002 – ரூ.34,540 கோடி2005-2006 – ரூ.50,625 கோடி2011-2012 – ரூ.1,03,999 கோடி2015-2016 – ரூ.2,11,483 கோடி2017-2018 – ரூ.3,14,366 கோடி2020-2021 – ரூ.4,56,660 கோடி2021 – ரூ.4,85,502 கோடி.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கொரோனா இரண்டாம் அலையைத் தடுப்பதில் நேரம் சென்றது.
நமது பற்றாக்குறை எவ்வளவு அதிகம் என்று காண்பிப்பதற்கு இன்னும் நேரம் ஆகும் என்பதால் மாநில நிதி நிலை மற்றும் வரவு செலவு திருத்தப்பட்டதை மக்களிடம் முன்வைக்க வேண்டும் என்பதால் `மேக்ரோ எக்கானமிக்’ அளவில் தயாரித்துள்ளோம்.
அதில் தவறு ஏற்பட்டால் நானே பொறுப்பு என்பதால்தான் இதில் என் பெயர் இடம்பெற்றிருக்கிறது.
இந்த அறிக்கையானது, எங்கள் தத்துவத்தையும் குணத்தையும் வெளிப்படுத்துவதற்காக வெளியிடப்படுகிறது. `எதிர்க்கட்சியாக இருந்தபோது கேட்டதை ஆளும்கட்சியாக வந்த பிறகு ஒளித்து வைக்காமல் வெளியிடுவதை எங்கள் அடையாளமாக இருக்க வேண்டும்’ என முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
எனவே, வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறோம். அடுத்ததாக, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதால், அந்தக் கடமையை நிறைவேற்றுகிறோம்.
வெளிப்படைத்தன்மையுடைய அரசாங்கமாகவும் மக்களின் ஒத்துழைப்பு மற்றும் கருத்துகளைப் பெற்ற பிறகு நிபுணர்களிடம் ஆலோசித்து அவர்களின் நிபுணத்தையும் உள்வாங்கிச் செயல்படுவது என்பது அரசின் கடமை. முறைகேடு என்ன, பாரம் என்ன என்பது தெரிந்தால்தான் ஒன்றாகச் சேர்ந்து திருத்த முடியும் என்பதால் வெளியிடுகிறோம்.
இதில் முக்கியமான 3 பிரிவுகள் உள்ளன.
நமது கடன் நிலை என்ன, வருமானம் எப்படியெல்லாம் மாறியுள்ளது, செலவீனம் எப்படியெல்லாம் மாறியுள்ளது என்பது மிக முக்கியமானவை. பொதுத்துறை நிறுவனங்களான மின்வாரியம், போக்குவரத்துக் கழகம், குடிநீர் வடிகால் வாரியம், மெட்ரோ குடிநீர் வாரியம் போன்றவை எந்தநிலையில் உள்ளது என்பதையும் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
நாட்டின் வளர்ச்சி, வேலைவாய்ப்பின்மை, வருமானம் எப்படி மாறியுள்ளது என்பதைப் பார்த்தால் அதனை ஒரு பாடமாக எதை எடுத்துக் கொள்ளலாம். இதுதொடர்பான விரிவான விவரங்களை வெள்ளிக்கிழமையன்று பட்ஜெட் தாக்கல் செய்யும்போது பார்க்கலாம்.
வருமானம் இல்லாத அரசாங்கத்தால் செலவுகளைக் குறைக்க முடியாது. நமது மாநிலத்தின் வருமானம் சரிந்துவிட்டது. இதைப் பற்றி சட்டமன்றத்தில் பேசியுள்ளோம். இந்திய ரிசர்வ் வங்கி இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. 15 ஆவது நிதிக்குழுவும் இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது.
3.16 சதவிகிதம் வருவாய் பற்றாக்குறை,
இந்திய அரசின் ஆண்டு தணிக்கை அறிக்கையில், எந்தளவுக்கு நிதிக்குழு நிதி ஒதுக்கியதோ, அந்த எதிர்பார்ப்புக்கும் நடந்த சூழலுக்கும் இடையில் ஆண்டுதோறும் 55,000 கோடியில் இருந்து 70,000 கோடி வரையில் குறைவாக உள்ளது.
தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை என்பது 3.16 சதவிகிதமாக உள்ளது. கடந்த 2006-11 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் உபரி வருமானமாக சில வருடங்களும் சில வருடங்கள் பற்றாக்குறையிலும் இருந்தது. குறிப்பாக, கடைசி 2 வருடங்கள் பற்றாக்குறையில் இருந்தது. மொத்தமாக, 5 ஆண்டுகால ஆட்சியைப் பார்த்தால் உபரி வருமானம் இருந்தது.
ஜெயலலிதா,
ஜெயலலிதாவின் ஆட்சியில் ஓரளவுக்கு வருவாய் மேலாண்மை இருந்துள்ளது. ஆனால், அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு, சிறைவாசம் போன்ற காரணங்களும் இருந்தன. அப்போது 17,000 கோடி அளவுக்கு வருவாய் பற்றாக்குறை இருந்தது. கடைசி ஐந்து வருடங்களில் பார்த்தால் 1 லட்சத்து 50,000 கோடி அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கடந்த 5 வருடத்தில் பொதுக்கடன் என்பது 3 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது. அதில் 50 சதவிகிதம் என்பது தினசரி செலவு என்ற அடிப்படையில் செலவழிக்கப்பட்டுள்ளது.
ஒருகாலத்தில் ஊதியம், ஓய்வூதியம், வட்டி ஆகியவற்றுக்கு என வருமானம் வந்து கொண்டிருந்தது. அதேநேரம், கடனை வாங்கி கட்டாய செலவை செய்வதும் நடந்துள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இந்தளவுக்கு செயல்படவில்லை. மகாராஷ்ட்ரா, குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று நிதிநிலையில் சீர்கேடுகளை ஏற்படுத்தவில்லை. நாம் ஏற்கெனவே சரிந்திருந்ததால் இந்தளவுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்” என்றார்.
குடும்ப தலைவர் தலையில் 2 லட்சத்து 63,976 கடன்.
மேலும், “இன்றைக்குள்ள சூழலில் 2 கோடியே 16 லட்சம் குடும்பங்கள் இருப்பதாக எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு குடும்பங்களின் தலையிலும் 2 லட்சத்து 63,976 ரூபாய் கடன் உள்ளது. இது பொது சந்தா கடன் மட்டுமே.அதில் இருந்து தமிழகம் மீண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளோம்.
தமிழ்நாட்டில் 2001 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்து வெளியேறியபோது கடன் அளவு என்பது 34,540 கோடி ரூபாயாக இருந்தது. அதே ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஆகஸ்ட் 18 அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின்போது, நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியானது.
அ.தி.மு.க.ஆட்சி
தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி முடியும் காலத்தில் கடன் அளவு என்பது 63,848 கோடியாக உயர்ந்தது. 2011 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சி நிறைவடையும் காலத்தில் கடன் அளவு என்பது 1.14 லட்சம் கோடியாக இருந்தது. அதன்பிறகு 2011-16 ஆம் ஆண்டுகளில் கடன் அளவு 2.28 லட்சம் கோடியாக அதிகரித்தது. 2016 ஆம் ஆண்டில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சியமைந்த பிறகு 2021 வரையில் கடன் அளவானது 4.85 லட்சம் கோடியாக அதிகரித்தது.
2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது கடன் அளவு 4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடியே 54 லட்சம் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் 5.70 லட்சம் கோடியாக உயரும் எனவும் கூறப்பட்டது. நமது மாநிலத்தின் கடன் அளவு கடந்த 20 ஆண்டுகளில் 13 மடங்கு உயர்ந்துள்ளது” என்றார்.
2001 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியின்போது சட்டசபையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் தற்போது “செய்தியாளர்களின் முன்னிலையில்” வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
மேலும் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம் இருந்து தேவையான அளவுக்கு வரி வசூல் செய்தால் மட்டுமே அரசின் திட்டங்களை செயல்படுத்த முடியும்.
தமிழக அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்படக்கூடியது என்பதை நிரூபிக்கும் வகையிலும், தேர்தல் அறிக்கையில் நாங்கள் கூறியபடியும் இந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறோம்.
அ.தி.மு.க. ஆட்சியில் வருவாய்க்கு அதிகமாக திருப்பி செலுத்த முடியாத அளவுக்கு கடனை வாங்கி குவித்துள்ளனர். தமிழக அரசுக்கு ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் கோடி பொதுக்கடன் வைத்துவிட்டு போயிருக்கிறார்கள்.
வரி வருவாயை பொறுத்த வரையில் 4 வழிகளில் அரசுக்கு வருவாய் கிடைக்கின்றன. வரிகள் மூலம் ஈட்டப்படும் வருவாய், வரி இல்லாத வருவாய், 3-வதாக மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வரி வருவாய் ஆகும். 4-வதாக திட்டங்கள் மூலம் கிடைக்கும் வருவாய்.
இந்த 4 வழிகளிலும் கிடைக்கும் வருவாயை திரட்டுவதில் அ.தி.மு.க. அரசு வீழ்ச்சியை சந்தித்து வந்திருக்கிறது. குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளாக வாகன வரி உயர்த்தப்படாமலேயே உள்ளது. சொத்து வரிகளும் மாற்றி அமைக்கப்படவில்லை.
இப்படி அனைத்து துறைகளிலும் உரிய வரிகள் விதிக்கப்படவில்லை.
‘ஜீரோ’ டேக்ஸ் என்பது அர்த்தம் இல்லாதது ஆகும். சரியான நபர்களிடம் இருந்து வரி வசூல் செய்ய வேண்டும்.
உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம் வரி வசூல்.
ஏழை, நடுத்தர மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களையும் செயல்படுத்திட பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம் இருந்து தேவையான அளவுக்கு வரி வசூல் செய்தல் வேண்டும். அதனால் மட்டுமே அரசின் திட்டங்களை செயல்படுத்த முடியும்.முடியும்.
சாமானிய மக்களிடம் வரி வசூல் செய்வதை விட பெரும் பணக்காரர்களிடம் வரி வசூல் செய்வது பல்வேறு நாடுகளிலும் உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் இது போன்று வரி வசூல் முறை வெற்றி பெற்றுள்ளது.
குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் யார் எவ்வளவு பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் வதந்தி பரப்புவார்கள், ஆனால் அதில் நன்மை தான் உள்ளது.
மின் வாரியத்துக்கு மாநகராட்சி பல கோடி பாக்கி.
தமிழக மின் வாரியத்துக்கு மாநகராட்சி செலுத்த வேண்டிய மின் கட்டணங்கள் பல கோடி அளவுக்கு பாக்கி உள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் தமிழகத்தில் பல்வேறு மாநகராட்சி, பொதுத்துறை நிறுவனங்கள், மின்வாரியத்துக்கு பாக்கி வைத்துள்ளதால் புதிய மின்வாரிய பணிகளை தொடங்க முடியாத நிலை உள்ளது.
வாக்களித்த மக்களின் தேவையை அறிந்து அரசு செயல்படுக்கொண்டிருக்கும் தி.மு.க. அரசு மக்களுடன் இணைந்து செயல்படும் என நிதி அமைச்சர் தியாகராஜன் சொன்னார்
Categories:
Uncategorized