8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு – வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
சேலம் – சென்னை இடையே 8 வழி பசுமை சாலை ரூ.10 ஆயிரம் கோடி
செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை சென்னையில் இருந்து காஞ்சீபுரம்,
திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்கள் வழியாக சேலத்துக்கு
277 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் 36.3 கிலோ மீட்டரும், தர்மபுரியில் 56 கிலோ மீட்டரும்,
திருவண்ணாமலையில் 123 கிலோ மீட்டரும், காஞ்சிபுரத்தில் 59 கிலோ மீட்டரும்
என பசுமை சாலை அமைக்கப்படுகிறது.
இதற்காக 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து
வருகிறது. விளை நிலங்கள், பசுமை காடுகள், மலைகள், நீர் நிலைகள் கையகப்
படுத்துவதால் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நிலம் அளவிடும் பணி நடக்கும்போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால்
போலீசார் உதவியுடன் அளவிடும் பணி நடந்து வருகிறது. அப்போது சில பெண்கள்
கண்ணீர் விட்டு அழுது புரண்டனர். சிலர் தீக்குளிக்க முயற்சியும் செய்தனர்.
ஆனாலும் 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற பணிகள் மும்முரமாக நடந்து
வருகிறது.
சேலம் மாவட்டத்தில் 36.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலம் அளவீடு செய்யும் பணி நேற்று மாலையில் நிறைவு பெற்றது.
இந்த திட்டத்தை கைவிடக்கோரி 8 வழி பசுமை சாலை எதிர்ப்பு பாதுகாப்பு
கூட்டமைப்பு சார்பில் சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், திருவண்ணாமலை ஆகிய
மாவட்டங்களில் நிலம் அளவீடு செய்யப்பட்ட இடங்களில் இருக்கும் வீடுகளில்
கருப்புக்கொடி கட்டும் போராட்டம் இன்று முதல் நடத்தப்போவதாக அறிவித்து
இருந்தது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் நிலம் அளவீடு செய்யப்பட்ட பகுதிகளான
ஆச்சாங்குட்டப்பட்டி, குப்பனூர், கீரிப்பட்டி, குள்ளப்பட்டி, ராமலிங்கபுரம்
உள்ளிட்ட கிராமங்களில் கருப்புக்கொடி கட்டப்பட்டது. வீடுகளிலும், விவசாய
நிலங்களிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டு இருந்தது. கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் சில கிராமங்களில் கருப்பு கொடி ஏற்றினர்.
தருமபுரி மாவட்டத்தில் 54.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலங்களை அளவிடும் பணி நடந்து முடிந்தது.
இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை அடுத்த கோம்பூர்,
சின்னமஞ்ச வாடி, பெரிய மஞ்சவாடி, மாளகாபாடி, கொக்காரப்பட்டி, இருளப்பட்டி
ஆகிய கிராமங்களில் 100-க்கும்மேற்பட்ட விவசாயிகள் தங்களது வீடுகளில்
கருப்பு கொடி ஏற்றி பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், புதுப்பாளையம், கலசப்பாக்கம், போளூர்,
ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய சுற்று வட்டார பகுதி கிராமங்களில் நார்த்தம்
பூண்டி, முத்தரசம்பூண்டி, நயம்பாடி, நம்மியந்தல், நீப்பந்துறை உள்பட 92
கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி
ஏற்றியுள்ளனர்.
அடுத்த மாதம் 6-ந் தேதி 8 வழிச்சாலை அறிவிப்பு அரசாணையை எரித்து போராட்டம் நடத்தவும் விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
மேலும் ஜனாதிபதி, பிரதமர், முதல்-அமைச்சர், கலெக்டர் மற்றும் நில எடுப்பு
வருவாய்த்துறை அலுவலர் ஆகியோருக்கு ஆட்சேபனை மனுக்களை நேரடியாகவும், பதிவு
தபால் மற்றும் மின் அஞ்சலில் அனுப்பவும் 8 வழி பசுமை சாலை எதிர்ப்பு
கூட்டமைப்பினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இந்த சாலை 59 கி.மீட்டர் தூரத்துக்கு அமைக்க திட்ட மிடப்பட்டு உள்ளது.
தாம்பரம் அருகே மண்ணிவாக்கம் பகுதியில் தொடங்கும் சாலை படப்பை,
குருவன்மேடு, பாலூர், ஆனம்பாக்கம், மணல்மேடு, ஒழுகரை, இளநகர் வழியாக
காஞ்சீபுரம் மாவட்ட எல்லையான பெருநகர் வழியாக திருவண்ணாமலை
மாவட்டத்திற்குள் செல்கிறது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை நிலம் கையகப்படுத்தும் பணி
தொடங்கப்படவில்லை. எனினும் விவசாய நிலங்கள் அதிக அளவில்
கையகப்படுத்தப்படும் என்பதால் ஆரம்ப கட்டத்திலேயே விவசாயிகள் எதிர்ப்பு
தெரிவித்து வருகிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மட்டும் 525 ஹெக்டேர் நிலங்கள் (1300 ஏக்கர்)
கையகப்படுத்தப்பட உள்ளன. 8 வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து
காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி
இருந்தனர்.
உத்திரமேரூர் தாலுகா பகுதியில் மணல்மேடு, ஒழுகரை, வெங்கூர், அனுமந்த
தண்டலம், சித்தேரி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள், விவசாய
நிலங்களில் விவ சாயிகள் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு கூறும் போது,
“பசுமை வழிச்சாலையால் விவசாயிகள் நிலம் பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள
விழுப்புரம்-சேலம் சாலையை விரிவுபடுத்தினாலே போதும்.
2013 நில எடுப்பு சட்ட மசோதாபடி விவசாயிகளின் கருத்து கேட்ட பின்பே விவசாய
நிலங்களை கையகப்படுத்த வேண்டும். ஆனால் இப்போது விவசாயிகளிடம் கருத்து
கேட்காமலேயே நிலம் எடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு
தெரிவித்து ஜூலை 6-ந் தேதி 5 மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசாணை நகல்
எரிப்பு போராட்டம் நடத்தப்படுகிறது” என்றார்.